தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா?

💥 தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா?

💥பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.


💥இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


💥ஒரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நாம் தாமதமாகச் சென்றால் அங்கே நாம் பாங்கு சொல்லத் தேவை இல்லை. அப்பள்ளியில் முன்னரே சொல்லப்பட்ட பாங்கு நம்முடைய தொழுகைக்கும் போதுமானதாகும்.


💥ஜமாஅத்தைத் தவற விட்டு தாமதமாக வந்த நபித்தோழரைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருடன் இன்னொருவரை சேர்ந்து தொழுமாறு கட்டளையிட்டார்கள். இன்னொரு பாங்கு சொல்லுமாறு கட்டளையிடவில்லை.


💥இது போல் ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்பட்டால் அப்பகுதியில் உள்ளவர்கள் தாமதமாகத் தொழும் போது அல்லது வீட்டில் தொழும் போது மீண்டும் பாங்கு சொல்லும் அவசியம் இல்லை.


💥அப்பகுதியில் பாங்கு சொல்லப்படாவிட்டால் வீட்டில் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாலும், தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.


ஹதீஸ்


நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது “நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று எனக்கும், என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல் : புகாரி 2848


💥கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் கூறியே தொழ வேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

ஹதீஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும், இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அபூதாவூத் 1017


ஹதீஸ்

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மது 3667



கருத்துரையிடுக

புதியது பழையவை