உணவு வீண்விரையம் குறித்து இஸ்லாம்..!
உணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும். உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க காரணம் இது போன்று ஒரு பக்கம் உணவு தேவைக்குப்போக மிகுதியாக ஒதுங்கி விடுதலே என்பதை உலகம் உணர வேண்டும். உணவு வீணாகுதல் விஷயத்தில் அதனை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து வரும் வளரும் நாடுகள் அதனை பணம் கொடுத்து வாங்கிய வளர்ந்த பணக்கார நாடுகளை கண்காணித்து உணவை வீணாக்காமல் எச்சரிக்க வேண்டும்.
யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடியாமல் குப்பையில் கொட்டுவது என்பது வேறு. இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது.
இவர்களைப்பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்...
"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள் ஆவர்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31)
'முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "மறுமை நாளில், நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் எவரும் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. அவற்றில் ஒன்று தான் சம்பாதித்த பணத்தை எவ்வாறுசெலவு செய்தாய் ?...". (திர்மிதி)
ஆக,இந்த வீண்விரயம் செய்வது ஒரு விதத்தில் சிலருக்கு தீங்கு செய்வது போல் தான். இனி இது போன்று செயல்களிலிருந்து விட்டு விலகியிருப்போம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும். (நூல்: புகாரி 6446)